பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்


பரங்குன்றம் முருகன் கோயிலும், பள்ளர் குலத்தாரின் பரிவட்ட முறையும்


    மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் 'முருகன் கோயில்' என்று தற்போது வழங்கப்படும் கோயில் பாண்டிய அரசன் நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் அவனது படைத்தலைவனான சாத்தான் கணபதியால் கலியாண்டு 3874 இல் (கி.பி.773 ) தோற்றுவிக்கப் பட்ட மிக அழகியதோர் குடைவரைக் கோயிலாகும்.(அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ) பாண்டியர் குடைக் கோயில்களுள் சிற்ப அமைப்பிலும், செறிவிலும் இக்கோயில் ஈடு இணையற்றது ஆகும்.

    பாண்டிய நாட்டின் சிறப்பு வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1050 அடி உயரத்தில் இருக்கும் இவ்வூரில் உள்ள மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டதாகும். இவ்வூர் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்றுத் திகழ்கிறது. (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.6 ) மலையடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலின் பெரும் பகுதி மலையின் வட பகுதியில் இணைந்துள்ளது. மேற்கு பகுதியில் இருந்து மலையின் நடுப்பகுதி வரை ஏறிச் செல்லச் சிறிய படிக்கட்டுகள் செங்குத்தான பாறையில் அமைக்கப் பட்டுள்ளன. மலை மீது ஒரு குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. அதில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் வருமாறு.
        "எருக்காட்டூர் ஈழக் குடும்பிகன் போலாலயன் செய்த
         ஆய்சதன நெடுஞ்சாதனம்" 

(குருசாமி சித்தர், தே.ஞானசேகரன், மீண்டெழும் மள்ளர் வரலாறு,ப.39 )



    என்று ஈழக் குடும்பிகன் என்ற ஈழ நாட்டுப் பள்ளர் குலத்தவன் செய்வித்த கற்படுக்கை கொடை பற்றி மேற்கண்ட பொறிப்புகள் தெரிவிக்கின்றன.இக்குகையில் பல ஆட்கள் தங்குவதற்கு இடமுண்டு.இந்த குகை 'பஞ்ச பாண்டவர்' குகை என்று இப்போது அழைக்கப் படுகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.13 ).மலை உச்சியில் சுனை ஒன்று உள்ளது. இச்சுனையில் உள்ள மீன்கள் வனப்பு வாய்ந்தவை. மலை உச்சியில் இசுலாமியர் வழிபடக்கூடிய 'பள்ளி வாசல்' ஒன்றும் உள்ளது. இந்த மலையை 'சிக்கந்தர் மலை' என்றும் இசுலாமியர்கள் அழைத்தனர் போலும். தமிழகத்தில் வாழ்கின்ற இசுலாமியர்கள் பெரும்பாலும் பள்ளர்களே என்பது அறிந்ததே. இக்கோயிலில் பள்ளர்களுக்கு உரிய உரிமை மறுக்கப் பட்ட போது இம்மக்கள் இசுலாத்திற்கு மாறித் திருப்பரங்குன்றத்திற்கு மேலேயே பள்ளிவாசலை கட்டியிருக்க வேண்டும்.

    ஆண்டிற்கு ஒருமுறை புரட்டாசித் திங்கள் மலைக்கு மேல் முருகனைப் பல்லக்கில் கொண்டு சென்று விழா நடத்தப் படுகின்றது. 'உலகெல்லாம் வாழ, மழை பெய்ய வேண்டி'  இவ்விழா நிகழ்வதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் இவ்விழாவானது இந்திரா விழாவின் எச்சமாக விளங்குகின்றது என்பது தெளிவு.

    இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ).

    திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை மழவராயனுடைய வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது. 'மழவர்' என்பது மருத நில மள்ளரை குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.

    முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 15 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று 'பூவின் கிழத்தி' என்ற மெய்க்கீர்த்திப் பகுதியோடு தொடங்குகிறது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.23 ). கிழவன்,கிழத்தி என்பது மருத நிலத் தலை மக்களான மள்ளர் குலத்தோரின் பெயர்களே என்பதையும் இங்கனம் எண்ணல் வேண்டும். திருப்பரங்குன்றம் உடையார் கோயில் நிர்வாகத்தினரான குலசேகரபுரத்தார்க்கு நிலம் விற்பனை செய்ததையும் கல்வெட்டுக் (ARE 240 /1941 -1942 ) குறிப்புக் கண்டு உணர்த்துகிறது. குலசேகரபுரம் என்ற ஊர்ச்சபையினரால் கோயிலுக்கு நிலம் திருவுண்ணாழிகை நல்லூர் என்ற ஊர் வழிபாட்டிற்காக வழங்கப் பட்டமையும் கல்வெட்டால் (ARE 245 1941 - 1942 ) அறியப்படும் செய்தியாகும் (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.24 ).

    "தேவேந்திரன் தன் பகைவனாகிய சூரபன்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப் பெருமானுக்குத் தன மகள் தெய்வானையைத் திருமணம் செய்விக்க விரும்புகிறார். நாரதர்,நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள முருகப் பெருமான் தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்கிறார்" என்ற செய்தி புராணங்கள் மூலம் அறியப்படும் உண்மைகளாகும். மேலும், கருவறையில் உள்ள யானை தேவேந்திரனின் ஐராவதம் என்றும், தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் முருகனுக்குத் தொண்டு புரிய வந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.27 ). 'ஐராவதம்' என்னும் பெயரில் மதுரை மாநகருக்குள் 'ஐராவத நல்லூர்' என்ற பள்ளர் ஊர் ஒன்று உள்ளதென்பதை இங்கே நினைவில் கொள்வதென்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

    நக்கீரர் இயற்றிய முருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்ப்பாடலும்; மருதநில நாகனார் எருக்காட்டூர் தாயங்கண்ணார் இயற்றிய அகநானூறு பாடல் 149 ; மருத நிலா நாகனார் பெருங் கடுங்கோன் இயற்றிய கலித் தொகை பாடல் 27 ,93 ; சங்கப் புலவர்கள் இயற்றிய பரி பாடல் 6 ,8 ,14 ,17 ,18 ,19 ,21 ; மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி பாடல் 262 முதல் 270 வரை; திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருவிடை மருதூர் பதிவகம்) பாடல் 165 ; சுந்தரர் இயற்றிய தேவாரம்; மாணிக்க வாசகர் இயற்றிய திருக்கோவையார் பாடல் 11 ,144 , 178 ,292 , 299 ; சேக்கிழார் இயற்றிய திருவிளையாடற்ப் புராணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பினை எடுத்தியம்புகின்றன.
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம் பாடல் 11 இல் இடம் பெற்றுள்ளன.
        "உலகாண்ட மூவேந்தர் முன்னே
         மொழிந்த..."

 (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.30 )

    என்ற அடியால் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் எனத் தெரிகிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் அப்டியில் திருப்பரங்குன்றத்தைப் பற்றிக் கூறும் போது 'மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன' என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில், பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன. இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு. இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்குப் 'பரிவட்டம்' கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.

    முருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது. தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் 'மறு வீட்டிற்கு அழைத்தல்' விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டியானை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)




    முருகன் தெய்வானை 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' மறு வீடு வருதல் நிகழ்வு முடிந்த பின், அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.

    மதுரை மாடக்குளம் மரபு வழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிருவாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு 'பரிவட்டம்' கட்டப் படுகிறது

பின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி,பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

    தற்போது  மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாகத் தொழிலதிபர் வி.கே.துரை,உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊருக்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பால சுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப் படி வழங்கப் படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்ப்கின்றது. (நேர்காணல், ப.ராம்குமார்,வத்தலகுண்டு)

    பள்ளர் குலத்தாரின் 'பரிவட்டம்' மரபுரிமை முறையானது பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டுப் தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப் படுகின்றது. இதம் மூலம் மதுரை மாடக்குளம் பாண்டியராட்சியின் போது நிருவாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததென்பது தெரிய வருகின்றது. பாண்டியர் காலச் செப்பேடுகளில் 'மதுரை மாடக்குளம்' இடம் பெற்றுள்ளது என்பது இவ்வரலாற்றுக் கருதுகோளுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கும் சான்றாதரமாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் முன் பகுதியில் கிழக்கு திசையில் பள்ளர் தெரு உள்ளது. தற்போது இங்கே 100 வீடுகள் உள்ளன. இதில் 25 குடும்பங்கள் நிலக்கிழார்களாக உள்ளனர். இன்றளவும் இக்கோயில் நிலங்கள் ( 4 ஏக்கர் ௦௦ 0.7 சென்ட்) (சர்வே எண்: 348 - 1 , 348 - 5 ) பள்ளர்களுக்கு உரிமையுடையதாக உள்ளது. இந்நிலங்கள் காயாம்பு,வரதாரம் (348 /1 இல் 1 -91 ஏக்கர்), அருணாச்சலம் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்), இருளன் (348 /1 இல் 1 - 06 ஏக்கர்), மலையடியான் (348 /5 இல் 0 - 53 ஏக்கர்) என ஐந்து பள்ளர்களின் பெயர்களில் உள்ளது. இந்நிலங்களை இவ்வுரிமையாளர்களில் ஒரு சாரார் கமுக்கமாக 27 .07 .1955 அன்று துரைச்சாமி பிள்ளை மகன்கள் முத்தையா பிள்ளை,கந்தசாமி பிள்ளை ஆகியோருக்கு விற்று விட்டனர். இதனை அறிந்த மற்றொரு சாரார் வழக்கு தொடுத்து (வழக்கு எண்: பிரிவு 8 (2 )(1 ) பி-யின் கீழ் 348 /1 பாகம் 0 -32க்கு சட்டம், பிரிவு 21 8 (2 ) (11 ) - இன் கீழ்) நிலத்தை மீட்டனர். பண்ணைப் பள்ளனான நிலக்கிழார் ம.மணி என்பவர் மலையடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பூசகராகவும் விளங்குகின்றார். இவர் பூணூல் தரித்துள்ளார். இஃது தமிழர் மரபாகும்.

    திருப்பரங்குன்றம் கோயில் மதுரை மீனாட்சி சுந்தர பாண்டியன் கோயிலின் துணைக் கோயிலாக உள்ளதென்பதைக் கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் பெரிய தேரோட்டும் உரிமையை இடைக்காலத்தில் பள்ளர்கள் இழந்துள்ளனர். சிறிய தேரோட்டும் போது பள்ளர்கள் முதல் மரியாதை பெற்று தேரோட்டுகின்றனர்.

    ஆண்டிற்கு இரு முறை கார்த்திகை தை மாதங்களில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கோயில் ஆவணங்களில் பதிவு பெற்றுள்ள 'பண்ணைப் பள்ளன்' மிராசு (நிலக்கிழார்) கந்தக் குடும்பன் மகன் மலையடியான் என்பாரது மகன் மணி என்னும் பள்ளர் குலத்தவர் 'வெள்ளை வீச' தேவேந்திரர்களின் தேர் தெரு வீதிகளில் உலா வருகிறது. திருப்பரங்குன்றம் பள்ளர் தெருவில் சாவு விழுந்தால் கோயில் வாயிலுக்கு மேள தாளத்துடன் சென்று இறந்தவர் ஆணாக இருந்தால் ஒரு வேட்டியும், மாலையும், பெண்ணாக இருதால் ஒரு மாலையும், சேலையும் பெற்றுக் கொண்டு பின்னரே இறந்து போன பள்ளர்-பள்ளத்தியரின் உடலங்கள் சவ அடக்கம் செய்யப் படுகிறது. இவ்வழமை இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பாண்டியர்களால் கட்டப் பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கு பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள் இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன.




2 comments:

  1. ஆகா...ஆகா...அருமை...மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நண்பரே.. மழவர் பள்ளர் என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் எனக்கு தேவை படுகிகிரது.. நீங்கள் கொஞ்சம் பதிவிட்டல் எனக்கு உதவியாக இருக்கும்

    ReplyDelete