மதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்

மதுரை வரலாறு

        தென்பாண்டி நாட்டிலுள்ள பள்ளர்கள் நடுவே மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கி வந்துள்ளது. வைகையாற்றின் தென்கரையில் அவனியாபுரம்,வில்லாபுரம்,பழங்காநத்தம்,மாடக்குளம்,பொன்மேனி,தானத்தவம்புதூர்,விராட்டிபத்து,அச்சம்பத்து,ஆரப்பாளையம்,அனுப்பானடி,சிந்தாமணி,ஐராவத நல்லூர்,விரகனூர் ஆகிய ஊர்களும், ஆற்றின் வடகரையில்வண்டியூர்,கருப்பாயூரணி,மானகிரி,மதிச்சியம்,கோசாகுளம்புதூர்,செல்லூர்,'மீனாட்சி புரம்' என்ற பெயரில் மூன்று ஊர்கள்,தத்தநேரி,விளாங்குடி ஆகிய ஊர்களும் மதுரை மாநகருக்குள் நடுவம் கொண்டுள்ள மருத நில மக்களான பள்ளர்களின் பழம்பெரும் குடியிருப்புகளாகும்.


         மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்குக் கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இச்சுவர் 'சுந்தர பாண்டியன் திருமதில்' என்றே வழங்கப்படுகிறது (கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.279). பாண்டிய அரசர்கள் 'அவனிப சேகரன்' என்றும், பாண்டிய அரசிகள் 'அவனி முழுதுடையாள்' என்றும் அழைக்கப் பெற்றனர்(கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.152). இது பற்றியே அவனியாபுரம் என்ற ஊர்ப் பெயர் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் பள்ளர்குல மக்களே பெருந்திரளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 


        பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகிறது. மதுரையைப் பற்றிய அக்காலத்தியக் கதைகளை இப்புராணம் பதிவு செய்துள்ளது. 'மாடக்குளக்கீழ் மதுரை' எனக் கல்வெட்டுகளில் வரும் பெயர் இந்நூலிலும் வருகிறது. 'மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு' எனப் பள்ளர் வரலாற்றை பறைசாற்றும் பழனி செப்பு பட்டய வரி 216 குறிக்கும். பாண்டியர் வரலாற்றை தாங்கிய மேற்கண்ட வரலாற்று முதன்மைச் சான்றுகள் முன்மொழிகின்ற மதுரை 'மாடக்குளம்' பள்ளர்களின் பழம்பெரும் ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.


சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் - ஊர்சூழ்வரி
அடிகள் 15 - 22
                             மல்லன் மதுரை
"அல்லலுற் றாற்றா தழுவளைக் கண்டேகி
மல்லன் மதுரையா ரெல்லாருந் தாமயங்கித்
களையாத துன்பமிக் காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கோல்
மன்னவர் மன்ன மிதிக்குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றஞ் சிதைந்த திதுவென்கோல்
மண் குளிரச் செய்யு மறவே னெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திதுவென்கோல்
"

    பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்ற கண்ணகியைக் கண்டு அவள் துயரத்தைத் தம்மால் ஆற்ற முடியவில்லையே என்று ஏக்கமுற்று மல்லன் பாண்டிய நெடுஞ்செழியனுடைய மதுரை நகரத்தில் வாழுகின்ற மக்களெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் எடுத்துரைக்கின்றது.


        இச்செய்யுளின் மூலம் 'மல்லன் மதுரை' வாள் வேந்தனான தென்னவன் பாண்டிய மன்னனின் தலைநகர் என்பது தெரிய வருகிறது. நெடுநெல்வாடையும் பாண்டியரின் தலைநகரை 'மாட மோங்கிய மல்லன் மூதூர்' (அடி.29) என்கிறது. பொ.வே. சோமசுந்தரனாரின் கழக வெளியீடு 'மல்லன் மூதூர்' என்கிறது. ஏனைய பதிப்புகள் சிலவற்றில் திரிக்கப்பட்டு 'மல்லல் மூதூர்' எனப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'மல்லன் மூதூர்' என்றாலும் வளமுடைய பழைமையான மருத நிலத்து ஊர் என்று தான் பொருள். வளம் என்றாலே பயிர்த்தொழில்,உற்பத்திப் பெருக்கம் என்பதையே குறிக்கும். எனவே பாண்டியரின் தலைநகரான 'மல்லன் மூதூர் - மல்லன் மூதூர்' என்பது மள்ளர்களின் ஊர் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளவியலாது. 


திருவிளையாடற் புராணம்
மெய்க்காட்டிட்ட படலம்
செய்யுள் 27
                    மல்லன் மாநகரில் மள்ளரின் ஆரவாரம்
"பல்லிய மொலிக்கு மார்பும் பாயபரிசுலிக்கு மார்ப்புஞ்
சொல்லொலி மழுங்க
மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் கைம்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே"


    பல்வகை இசைக்கருவிகளின் முழக்கமும், குதிரைகளின் கனைப்பொலியும் மள்ளர் போர்ப்படை வீரர்களின் ஆரவார ஒலியும் ஒன்றோடொன்று கலந்து பேரொலியாயின. அப்படி மள்ளர் சிவபெருமானின் மள்ளர் படை வரும் ஒலி, முன்பொரு காலத்தில் பாண்டிய மல்லனின் மதுரைக் கடல் சீறி வந்து கொண்டது போலிருந்தது எனக் கூறும் மேற்கண்ட செய்யுளடியின் ஊடாக மதுரை மாநகர், மள்ளர்களின் பேரூர் என விளங்கி வந்தமையை அறிய முடிகிறது. இரா.பி.சேதுப்பிள்ளை தனது 'ஊரும் பேரும்' என்னும் நூலில் மதுரை என்பதை 'மருதந்துறை' என்று குறிப்பிடுகிறார்.


        மதுரை காந்தி என்ற நூலில் பா.சி.சந்திரபிரபு, 1935 ஆம் ஆண்டு நா.ம.இராசுப்பராமன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது மதுரை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    "நகராட்சியின் மூலம் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளும் நடைபெற்றன. நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களுக்கும், தெருக்களுக்கும் சாதிப் பெயர் சூட்டக் கூடாது என்று ஐயா அவர்கள் தடை விதித்தார். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அரசுகள் இது போன்ற சீர்திருத்தம் கொண்டுவர இன்றும் கூடத் தயங்குவதைப் பார்க்கிறோம். புரட்சிகரமான இத்திட்டத்தை 1935ஆம் ஆண்டில் ஐயா அவர்கள் மதுரையில் செயல்படுத்தியது அசாதாரணமானதாகும். அதற்கிணங்க சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றுப் பெயர் அளிக்கப்பட்டன. உதாரணமாக 'பள்ளர் தெரு' என்று வழங்கி வந்த தெருவுக்கு 'பெருமாள் கோயில் தெரு' என்று சூட்டப்ப் பட்டது. இன்று அந்த தெருவில் வசிப்பவர்களும் கூட இச்செய்தியை அறிவார்களா என்பது சந்தேகமே." (பா.சி.சந்திரபிரபு, மதுரை காந்தி (ஒரு சத்தியாகிரகியின் கதை), ப.44-45)
    

        பெருமாள் கோயில் தெருவாகப் பெயர் மாற்றப்பட்ட 'பள்ளர் தெரு' மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மேற்குப் புறம் இருந்தது. இவ்வாறு பள்ளர் குல மக்களின் அடையாளங்கள் பல அழிந்து போய்விட்டன.


பாண்டியர் இடுகாடு - கோவலன் பொட்டல்
    

        மதுரை பழங்காநத்தத்தில் உள்ள 'கோவலன் பொட்டல்' என அழைக்கப் படுகின்ற 'பாண்டியர் இடுகாடு' உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாறு அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தத்தில் உள்ள பாண்டியர் இடுகாடு என்பது இன்று பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் 'தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மயானம்' என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இடுகாடு என்பது ஒரு குலத்திற்கு சொந்தமான சொத்தாகவே இருந்து வருவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஃது தமிழரின் மரபு வழக்காறாகவே இருந்து வருகிறது.

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு நுழைவுப் பகுதி புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு உள்ப்புறம் புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாட்டில் உள்ள பள்ளரின் கல்லறை)

        பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைச் சிறைப்படுத்தி மரண தண்டனை வழங்கிக் கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 'பாண்டியர் இடுகாடு' 'கோவலன் பொட்டல்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் காட்டுவதாகக் கூறி மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்ச்சியைப் பழங்காநத்தம் பள்ளர்கள் முறியடித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியல்புகளையும் ஒப்பு நோக்கும் போது பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.

தேவேந்திரன் சக்ரவர்த்தி: ஊர் குடும்பு ஆட்சி முறை

ஊர் குடும்பு ஆட்சி முறை - அன்றும் இன்றும்


         மருத நிலத்தில் தோன்றிய ஊர்க்குடும்பு ஆட்சிமுறை களத்து மேட்டை நடுவமாகக் கொண்டெழுந்த காணியாட்சி முறையாகவே தொடக்கத்தில் இருந்தது. எனவே தான் நெல் விளைவிக்கப்படும் நிலங்களின் தொகுப்பிற்கு 'குடும்பு' என்று பெயர் ஏற்ப்பட்டது. குடியிருப்பதற்காக மக்களிடம் இருந்து மன்னர்களால் பெறப்பட்ட வரிக்கு 'குடிமை' என்று பெயர். சோழர் காலத்தில் தோட்ட வாரியம், கழனி வாரியம், ஏரி வாரியம் எனத் தனித்தனி அமைப்புகள் இருந்ததைப் போன்று 'குடும்பு வாரியம்' என்றொரு தனி அமைப்பும் இருந்து இயங்கி வந்துள்ளது. இதில் பணி புரிந்தவர்கள் 'குடும்பு வாரியப் பெருமக்கள்' என்று அழைக்கப் பெற்றனர்.


       காஞ்சிபுரம் வட்டம், மணி மங்கலம் கல்வெட்டில் 'குடும்பிடு பாடகம்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பிடு பாடகம் என்பது நிலப் பெயர் ஆகும். குடும்பு செய்வதற்கான நிலம் குடும்பிடு பாடகம் என்றானது. குடும்பர்களுக்கு உரிமையுடைய நிலம் குடும்பிடு பாடகம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேசுவர சாமி கோயில் கருவறையின் தெர்க்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முதல் பராந்தக சோழனின் 40 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி.947 ) இக்கல்வெட்டில் 'குடும்பு காட்டுக்காற் குடும்பி' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.


      களத்து மேட்டைக் கவனிக்கவும், விளை பொருட்களைக் கள்ளர்களிடம் இருந்து காக்கவும், ஏர் மள்ளர்களான குடும்பர்களுக்குத் துணையாகப் போர் மள்ளர்களான காலாடிகள் விளங்கினர். ஏர்க்கள நிருவாகத்தொடு போர்க்கள நிருவாகமும் இணைந்தபோது குடும்பன் காலாடி ஆட்சி முறையான மூவேந்தர்களின் அடிப்படை ஆட்சிமுறை தோன்றியது. குடும்பர்களுக்கு உதவியாக இருந்த காலாடிகளுக்குப் பதிலாக சில இடங்களில் வாரியார்கள் இருந்தனர். வாரியன் என்ற சொல்லே பின்னாளில் வாதிரியான் எனத் திரிந்தது. வாதிரியான் என்பது தற்போது 'வாத்திரியான்' என்று திராவிடத்தால் திரிக்கப் பட்டுள்ளது. வாதிரியான் என்பது பட்டியல் சாதிகளில் அகர வரிசை எண்.72 இல் உள்ளது.

இடைக்கால சோழர் ஆட்சியில் குடும்பு முறை

     குடும்பு என்னும் சொல்லாட்சி வரலாற்றில் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண முடிகிறது. பாண்டிய மன்னர்கள் ஏற்ப்படுத்திய குடும்பிய முறை பின்னர் சோழர்களிடமும், சேரர்களிடமும் வழக்கில் இருந்தது. ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை உலகிற்கு உணர்த்துவதற்கு உரிய சான்றாக நிப்பது உத்திரமேரூர் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் மூலம் இடைக்கால சோழர் ஆட்சி குடும்பு முறை செயல்பட்டதைப் பற்றிப் பார்ப்போம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 1 
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்


அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது   உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.


ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.


இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.


ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.


உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு


ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு


எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை


ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம்


ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு


ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத


ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட


ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை  செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.


உத்திரமேரூர் கல்வெட்டு - 2 
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ


ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும்  சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா


இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும்  ஒரு பா


ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை


உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்


ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்


எ) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம் 


ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக


ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா


ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு  நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே


ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்


ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்


ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.


ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்


ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண


ஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா


அக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்


அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.


       குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குடும்பு வாரியம்

    திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.


"ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து......இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து  அரைசூர் அரை சூருடைய .... ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்."


    பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.

செய்யுள் 88 
    "ஆளுக்கும் பணியாள் - சீவலப்

      பேரிக்குள் காணியான் - வில்லென்றும்
            அரிப்பிட்டுப் போட்டான் -
பள்வரி

            தெரிப்பிட்டுக் கோட்டான்

            ...................................... குடும்பு செய்

            தூராருக் குழைத்தான் - அழகர் சொம்

            மார்க்கப் பிழைத்தான்"


    என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது. 


    கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.


செய்யுள் 27 
    "இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
    யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
    மன்னு திருநெடுமால் கொண்டதும்
பள்ளியீசன்
    மற்றோர்சேர் வதும்
பள்ளி மாநிலமெல்லாம்
    பண்ணுந் துலுக்கர்தொழு கையும்
பள்ளி வாசல்கல்வி
    பயிலு மிடமனைத்தும்
பள்ளி யிவற்றால்
    தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்
குடும்பு
    செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்
"

கரையாளப் பள்ளன்

கரையாளப் பள்ளன்


        மீன் வகைகளை மீனவ மக்களை விட அதிகம் பேசும், ஆய்ந்து நோக்கும் ஒரே இலக்கியம் 'பள்ளு இலக்கியமே'. (மீன் வகைகளை பேசும் அத்தனை பள்ளு பாடல்களும் விரைவில் இங்கே பின் இணைப்பாக பதிப்பிக்கப் படும்). இவ்வாறாக பள்ளர்களின் வாழ்வியலோடு மீன்கள் நெருக்கமான உறவுடையவைகளாக உள்ளன. ஏனெனில் பள்ளர்களின் வேளாண் தொழிலோடு தொடர்புடையது ஆறு, குளம், கண்மாய், கிணறு முதலிய நீர்நிலைகலாகும். மள்ளர்கள் நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது வயல்களில் கயல்கள் விளையாடிய செய்தியை இலக்கியங்கள் பேசக் காணலாம். மருத நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் தோன்றும் மீன்களைப் பற்றி பாடியவர்கலேல்லாம் பள்ளர்களே. மீன் வகைகளைப் பற்றிய அறிவு பள்ளர்களிடம் இருந்ததென்பதைப் பள்ளுப் பாடல்கள் மூலம் அறியலாம்.(காண்க பின் இணைப்பு). பள்ளர்களே மீனினத்திற்க்குப் பெயர் சூட்டி வகைப்படுத்தியுள்ளனர் என்பதே மெய்மை வரலாறு. இன்றளவும் மருத நிலத்தில் பள்ளர்கள் மீனவர்களாகவும், வாழ்ந்து வருகின்றனர். பள்ளர்களும், பள்ளத்தியரும் குளங்களில் மீன் பிடிப்பதை நடப்பிலும் காணலாம். பள்ளர்களில் பெரும்பாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்களாகவும், மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாகவும், மீன் இறைச்சி உண்பவர்களாகவும் உள்ளனர் என்பது கண்கூடு. மருத நில மக்கள் உழவுத் தொழில் மட்டுமின்றி மீன் பிடிக்கும் தொழிலும் செய்துள்ளனர் என்பதை,


        "வானம் வேண்டா வறனில் வாழ்க்கை

          நோன் ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்

          மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை..." (அகநானூறு 186 : 1 )


என்னும் அகநானூற்றுச் செய்யுலடியின் மூலம் அறியலாம். இதனை அடியொற்றிப் பார்த்தால் பள்ளர்களுக்கும், மீன்களுக்குமான உறவை விளங்கிக் கொள்ளலாம்.


        கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு, நெய்தல் நில மக்கட் பெயரினைப் பரதர்,நுளையர், கடலர்,வலையர் , சலவர், திமிலர் என்றும், நெய்தல் பெண்டிர் பெயரினை நுளைச்சியர், பரத்தியர், (நுரைக்) கடற்ப்பிணாக்கள் என்றும், நெய்தல் நிலத் தலைவன் பெயரினைக் கொங்கன், துறைவன், மெல்லன், புலம்பன், கடற்சேர்ப்பன் என்றும் இலக்கணபப் படுத்தியுள்ளது. இப்பெயர்கள் நெய்தல் நில மக்களான மீனவர்களின் குலம் சார்ந்தவையாகும். இதில் 'கரையார்' என்னும் மீனவச் சாதி பெயர் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். நெய்தல் நிலத்தில் பறந்து விரிந்து கிடக்கும் கடற்ப்பரப்பில் மீன் பிடிக்கும் மக்களுக்குப் 'பரதவர்' என்னும் பெயர் ஏற்ப்பட்டது. படகில் சென்று மீன் பிடித்தவர்களே படவர் - பரவர் என்றாயினர் எனக் கொள்வோரும் உளர். மருத நிலத்தில் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், கண்மாய்க் கரையிலும் இருந்து மீன்பிடிக்கும் பள்ளர்களுக்குக் 'கரையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. 


         வேளாண்மைத் தொழிலுக்காக ஆறுகளுக்குக் கரைகண்ட பள்ளர்களே ஆற்றின் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டனர்.  மருதநிலமே கடை நிலம் எனப்பட்டது. எனவே பள்ளர்களுக்குக் 'கடையர்' என்னும் பெயரேட்பட்டது. அவ்வாறே கரையில் மீன்பிடிக்கக் கூடிய பள்ளர்களுக்குக்  'கரையார்' என்ற பெயர் ஏற்ப்பட்டது. நெய்தல் நில நாகரிகம், மருத நில நாகரிகம் தோன்றியதற்குப் பிறகே தோன்றியதென்பதற்கு, அது எல்லா நாகரிங்கங்களுக்கும் இறுதியில் பேசப் படுவதே சான்றாகும். ஆகக் கட்டுமரங்கள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பழக்கம் மருத நில நாகரிகத்திர்க்குப் பின்னரே ஏற்ப்பட்டிருக்க வேண்டும். பள்ளர்களில் வங்கப் பள்ளர், அழைத்துப் பள்ளர் என்ற வகையினர் தூத்துக்குடிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். வங்கம் என்றால் கப்பல்;கப்பல் கட்டக் கூடிய பள்ளர்கள் வங்கப் பள்ளர்கள் ஆயினர். அளம் என்றால் உப்பளத்தை குறிக்கும். உப்பளத்தில் பணியாற்றும் பள்ளர்கள் 'அளத்துப்பள்ளர்கள்' என்றாயினர். இவாகைப் பள்ளர்களின் முகாமையான தொழில் இன்றளவும் மீன்பிடித்தலேயாகும். வங்கப் பள்ளர், அளத்துப் பள்ளர், கரையாப் பள்ளர்  முதலிய பள்ளர் சாதி வகைகள் மருத நிலத்து நெல்லின் மக்களுக்கும், நெய்தல் நிலத்துக் கடலின் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கக் காணலாம். 


        கரையாளன், ஆற்றங்கரையான், குளத்தங்கரையான் எனக் பெயரிடும் பள்ளர்கள் நடுவே இன்றும் இருந்து வருகிறது. அய்யனார் கோயில்கள் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலுமே அமைந்திருக்கும். ஐயனாரைக் குல தெய்வமாகப் பள்ளரும், கரையாரும் வழிபட்டு வருவதை கள ஆய்வில் காணமுடிகிறது. இம்மக்களின் இக்குல தெய்வ வழிபாடு - முன்னோர் வழிபாடு பள்ளர்களும், கரையார்களும் ஒரே குலம் என்பதை உறுதி செய்கிறது. 


"வீரக் கரையாள ராசாவும்
வீர மார்த்தாண்ட ராசாவும்
அண்ணன் தம்பி இருபேரும்
அசுவத்தில் ஏறலுற்றார்
பாண்டியமார் இருபேரும்
.........................................
நாற்பது வீட்டுப் பள்ளர்களை
நலமுடனே கூட்டிவந்தனர்"


    (பேராசிரியர் சு.சண்முக சுந்தரம், ஐந்து கதைப்பாடல், ப.12 ) எனப் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம்(மறவர்) தனது ஐந்து கதைப் பாடல் ஆய்வில் வீரக்கரையாள ராசா, வீரமார்த்தாண்ட ராசா என்னும் பாண்டிய வேந்தர்கள் ஆட்சி செய்த பாண்டிய அரசின் உயிர்நாடியாக விளங்கிய நாற்பது வீட்டுப் பள்ளர்களை அழைத்து வந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார். 


தி.நடராசன் தொகுத்த கதைப்பாடல்களில் பள்ளர்களின் வீர வரலாறு பேசப்படுகின்றது. அதில்


"தட்டானென்கின்ற கொட்டாப்புளி
சமர்த்தனுக் கொரு கையோலை
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாதனுக்கு மொரு கையோலை
ஆயிரத்து ஐநூறு ராணைவத்தாரும்
அன்புடன் வந்தார் பாஞ்சாலத்தில்"
.....................................................
"வடுகத் தட்டானொருவன்
வாசம் பெற்ற கொட்டாப்புளி
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாயும் புலிபோல பள்ளர்களும்
எல்லோரும் கூடி அளப்புகள் பேசி
யெட்டு நாளைக் குள்ளாக
பாளையங் கோட்டையில் வைத்து
நம்மாளை பட்டமும் கட்டியே
வைக்க வேண்டும்" 


    மேற்கண்ட கதைப்பாடல் பள்ளர் படைத் தலைவன் ஒருவனை 'பள்ளக் குடும்பன் கரையாளன்' என்கிறது. யாழ்ப்பாணத்திலும் ஐயனார் வழிபாடும், அண்ணமார் வழிபாடும் பள்ளருக்கும், கரையாருக்கும் உரியதாக விளங்கக் காணலாம்.


    சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை - இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:


        "மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
        வேணமழை பெய்யும் நாளை காணும்
பள்ளீரே"


திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம், மானூர் பள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில்


        "அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, பட்டனக்கரைப் பள்ளு" என்பதில் கரையார் என்ற பள்ளர் பிரிவும் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.

        பட்டினக் கரையார் - பள்ளருள் ஒரு வகையினர் (Pattinak Karaiyar - A sub-divisioin of the pallar caste)  என்கிறது. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான 'தமிழ் லெக்சிகன்' அகராதி பக்கம் 346 . பட்டினம் என்றால் கடற்கரை ஊர் என்று பொருள். 


        இப்பட்டினக்கரையார் என்னும் பள்ளர்களில் ஒரு சாரார் மீன், கருவாடு, உப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தோடு முத்துக் குளித்தலில் கிடைத்த முத்துகளை விற்பனை செய்யும் பொருட்டு, இவர்தம் வணிக வளர்ச்சி கடல்கடந்து சென்றது. பின்னர் பல்பொருள் வணிகத்தில் இறங்கிய இவர்கள் பொருளியல் மேம்பாடு அடைந்து அதனை அடியொற்றியே தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினையை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குமுகமாகவே உருவெடுத்தனர். இவர்களே இன்று நகரத்தார்களாக - நாட்டு கோட்டைச் செட்டியார்களாக அறியப் படுகின்றனர். பள்ளருக்கும் கரையாருக்கும் குல தெய்வமாக விளங்கும் ஐயனாரே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு குல தெய்வமாகும். பின்னாளில் வணிகத்தில் ஈடுபட்ட பல்வேறு சாதிக் குழுக்களும் நரகத்தார்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக உருவெடுத்தனர்.